கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

 
இந்தியா

பதவிக்கு மல்லுக்கட்டும் முஸ்லிம் தலைவர்கள்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடி

இரா.வினோத்

பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கானுக்கு துணை முதல்வர் பதவி கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பதவியேற்றபோது அவருடன் 1 துணை முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் முஸ்லிம் பிரிவில் யு.டி.காதருக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மூத்த எம்எல்ஏவான ஜமீர் அகமது கானுக்கு பதவி வழங்கப்படாததால், அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஜமீர் அகமது கான் இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் டி.கே.சிவகுமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, தனக்கு பதவி வழங்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் ஜமீர் அகமது கானின் ஆதரவாளர்கள் நேற்று பெங்களூரு, மைசூரு, சித்ரதுர்கா ஆகிய இடங்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகளை பெற்றுத்தந்த ஜமீர் அகமது கானுக்கு கட்டாயம் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பெங்களூருவில் உள்ள சாம்ராஜ் பேட்டையில் இருந்து விதான சவுதாவுக்கு கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். விதான சவுதா அருகில் ஜமீர் அகமது கானுக்கு பதவி வழங்கக்கோரி முழக்கம் எழுப்பினர். அப்போது விதான சவுதாவுக்குள் நுழைய முயன்ற ஆதரவாளர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

முஸ்லிம் தலைவர்கள் போட்டி

ஜமீர் அகமது கானை போலவே காங்கிரஸில் உள்ள எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், என்.ஏ.ஹாரீஸ், சலீம் அகமது, கனீஷ் ஃபாத்திமா, தன்வீர் சேட் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவிக்காக காய்களை நகர்த்தி வருகின்றனர். ரிஸ்வான் அர்ஷத், சலீம் அகமது, தன்வீர் சேட் ஆகிய 3 பேரும் டெல்லிக்கு சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து அமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

என்.ஏ.ஹாரீஸ், கனீஷ் ஃபாத்திமா ஆகிய இருவரும் முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவியும், 10-க்கும் மேற்பட்டோர் வாரியத் தலைவர் பதவியும் கேட்டு தொல்லை செய்வதால் டி.கே.சிவகுமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT