டேராடூன்: இந்திய ராணுவ அகாடமியில் 9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்து நீண்ட கால பணியில் சேர்வது ராணுவ வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் பெண்கள் சிறப்பு சேர்க்கைத் திட்டத்தின் கீழ் அதிகாரிகளாக குறுகிய காலப் பணியில் சேர்க்கப்பட்டனர். இதனால் அவர்களால் உயர்பதவிக்கு வரமுடியவில்லை. அதன்பின் பெண்கள் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று நீண்ட காலப் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வெழுத பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் 2021-ல் அனுமதி அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தரவால் கடந்த 2025-ம் ஆண்டில், 17 பெண் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்தனர்.
தற்போது இந்திய ராணுவ அகாடமியில் முதல் முறையாக 9 பெண் அதிகாரிகள் உட்பட ராணுவ அதிகாரிகள் பலர் பயிற்சியை முடித்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா உத்தராகண்ட் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் 9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறுவது ராணுவ அகாடமியின் வரலாற்றில் சிறப்புமிக்க தருணம். இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாடு செல்வதை காட்டுகிறது.
இங்கு மேலும் பல பெண் அதிகாரிகள் வரும் காலங்களில் இணைவார்கள் என நம்புகிறேன். இந்த அகாடமி தேசத்துக்கான கவுரவம், தைரியம் மற்றும் சுயநலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்திய ராணுவ அகாடமியில் உங்களது பயணம் ஒழுக்கம், தியாகம் மற்றும் விடாமுயற்சி கொண்டதாக இருந்தது. ராணுவத் தலைமை என்பது கட்டளையிடுவது மட்டுமல்ல, அது குணநலன், இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றியது என்பதையும் நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்.
நீங்கள் நமது தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாவலர்கள். 140 கோடிக்கும் அதிகமான குடிமக்களின் புனிதமான நம்பிக்கையை நீங்கள் சுமக்கிறீர்கள். சேவையே மிக உயர்ந்த கடமை என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
மிகவும் சவாலான சூழ்நிலைகளில் நமது எல்லைகளைப் பாதுகாத்து, நாட்டின் கண்ணியத்தை நிலைநிறுத்திய பல ராணுவத் தலைவர்கள் இந்த அகாடமியில் இருந்துதான் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளனர். பயிற்சி அதிகாரிகளை வழிநடத்துவதில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட இந்த அகாடமியின் அதிகாரிகள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.