ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பிதோரியா பகுதியில் பலருக்கு முக்கிய கடிதங்கள் எதுவும் பல மாதங்களாக வரவில்லை.
இது குறித்து அவர்கள் தபால் துறையிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பிதோரியா பகுதியில் கடிதங்களை விநியோகிக்க வேண்டிய தபால்காரர் விகாஸ் குமாரிடம் தபால் நிலைய ஆய்வாளர் தீபக் குமார் விசாரணை நடத்தினார்.
இதில் அவர் சுமார் ஓராண்டாக எந்த கடிதத்தையும் மக்களுக்கு கொடுக்கவில்லை என தெரிந்தது. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதங்கள் எங்கே என விசாரித்தபோது, தபால் நிலைய வளாகத்தில் உபயோகம் அற்ற பொருட்கள் இருக்கும் அறைகளில் சாக்கு மூட்டையில் கடிதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் அப்பகுதி மக்களுக்கு வந்த ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், வங்கி கணக்கு புத்தங்கங்கள், வருமான வரித்துறை நோட்டீஸ்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் இருந்தன.
இதையடுத்து தபால்கார் விகாஸ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விநியோகிக்கப்படாமல் இருந்த கடிதங்கள் உரியவர்களிடம் சேர்க்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.