புதுடெல்லி: டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பிரவீன் குமார் திரிபாதி கூறியதாவது:
மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த சிலர் ஆன்லைன் மூலமாக தீவிரவாத குழுவை ஏற்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த கும்பலை கண்காணித்து வந்தோம். இதையடுத்து மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த மொசைப் அகமது என்ற சோனு, மும்பையைச் சேர்ந்த முகமது ஹமாத், ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த ஷேக் இம்ரான், பிஹாரின் கதிஹாரைச் சேர்ந்த முகமது ஷோகைல் ஆகிய 4 பேரை கைது செய்தோம்.
இவர்கள் தீவிரவாத அமைப்பு மற்றும் முஸ்லிம் நாடு உருவாக்கும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள். ஜாகிர் நாயக் போன்ற மத பேச்சாளர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள். இவர்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வந்ததோடு, ஆன்லைன் மூலம் பிறரையும் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்கள் மூலம் இந்த கும்பல் தீவிரவாத கொள்கைகளைப் பரப்புதல், பயிற்சி திட்டம், நிதி திரட்டுதல் பற்றி விவாதங்கள் நடத்தியுள்ளனர். ஒருவர் டெல்லி செங்கோட்டை,
இந்தியா கேட் ஆகிய இடங்களுக்கு கடந்த டிசம்பரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.