புதுடெல்லி: நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. ரயிலில் பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்தனர்.
நிகழ்ச்சியில், ரூ.14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஹரியானாவில் ரூ.12,470 கோடி, சண்டிகரில் ரூ.4,700 கோடி, பஞ்சாபில் ரூ.5,470 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது.
நாட்டின் முதல் ரயில் மும்பை - தானேவுக்கு இடையே இயக்கப்பட்டது என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அதேபோல், வரும்காலத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும்போது ஹரியானா, ஜிந்த், பானிபட் ஆகிய பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.
நான் ஜிந்த் நகருக்கு வரும்போது எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமைப்பு ரீதியிலான பணிகளுக்காக ஜிந்த் வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது” என தெரிவித்தார்.
முதல் ஹைட்ரஜன் ரயில் உருவாக்கத்தின் பின்னணி:
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின. ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது.
இத்திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, ரயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018-ம் ஆண்டில் இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச கட்டணம் ரூ.25: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தின் மின்மயமாக்கப்படாத 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் உள்ள 12 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் 2 முறை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இதன் பயணக் கட்டணம் மிகக் குறைவாக ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாரம்பரிய டீசல் அல்லது மின்சார வயர்களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் வேகம் எடுக்கும்போது உந்துதலை தர லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரிகளும், ரயில் வேகம் குறையும் போது பேட்டரியை தானாகவே ரீசார்ஜ் செய்யும் மறுஉருவாக்க தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஹைட்ரஜன் ரயில் 2 ஓட்டுநர் பெட்டிகள், 8 பயணியர் பெட்டிகள் என 10 பெட்டிகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 2,600க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. சோதனையின்போது இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்டது. ஆனாலும், பாதுகாப்பான, வழக்கமான இயக்கத்துக்காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட உள்ளது.