புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி எழுதிய "ஜாய் மா காளி" கடிதம் வீடுவீடாக விநியோகிக்கப்படுகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பெங்காலி மொழியில் எழுதியுள்ள ‘ஜாய் மா காளி' (Joy Maa Kali) கடிதம் நேற்று முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படுகிறது. இதன் இந்தி மொழிப் பதிப்பும் இணைய தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
காளி தேவியின் புகழுடன் தொடங்கியுள்ள அந்தக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்ற பல சிறந்த ஆளுமைகளின் தாயகமாக வங்காளம் விளங்கியது. ஆனால் தற்போதைய சூழலில் வங்காளத்துக்கு ஒரு புதிய திசை தேவை.
மேற்கு வங்க மாநிலம் பின்தங்கிய நிலைக்கு சென்றதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம். ‘சோனார் பங்களா' (தங்க வங்காளம்) மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழை மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. ஆனால், மாநில அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசால் நிதி அளிக்கப்பட்ட ஜன் தன்யோஜனா, உஜ்வாலா யோஜனா மற்றும் ஆயுஷ் மான் பாரத் போன்ற திட்டங்கள் லட்சக் கணக்கான வங்க மக்களைச் சென்றடைந்துள்ளது.
வாக்கு வங்கிக்காக வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மத ரீதியான துன்புறுத்தல்களால் வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வரும் முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் குடியுரிமை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் என்பதால், இக்கடிதம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.