ஹைதராபாத்: தேர்தலின் போது தேசத்தின் அந்நிய செலாவணி குறித்த விவரத்தை பிரதமர் மோடி அறியவில்லையா? என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதரபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்துமாறும், ரசாயன உரங்களை தவிர்க்குமாறும், வீட்டில் இருந்து பணியாற்றும் முறைக்கு திரும்புமாறும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி குறையும் என அவர் தெரிவித்தார். இதை திங்கட்கிழமை அன்று குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்விலும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றன. இந்த சூழலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி செவ்வாய்க்கிழமை அன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“எனது கேள்வி என்னவென்றால் தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த உள்ளதை தெரிவிக்காமல் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பிரதமர் மோடி மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆனால், இப்போதோ இத்தகைய இன்னல்கள் அனைத்தையும் சகித்துக் கொள்பவர்கள் தான் தேசபக்தி கொண்டவர்கள் என இதை சித்தரிக்கிறார். அப்போது நாட்டின் அந்நிய செலாவணி குறித்து பிரதமர் மோடி அறியவில்லையா? அல்லது மவுனம் காத்தரா?
பிரதமர் மோடியின் ஹைதராபாத் உரைக்கு பின்னர் பங்குச்சந்தையில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் போர் முடிவுக்கு வரும் நிலையை நெருங்கி உள்ளது. இத்தகைய சூழலில் இதுநாள் வரை இந்த இன்னல்களை சமாளித்த அரசு இப்போது ஏன் அதை இன்னும் சில காலத்துக்கு செய்யக்கூடாது. இப்பொது ஏன் பிரதமர் இப்படி இந்த விவகாரத்தை பார்க்கிறார்?
இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்பது நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் சுமையாகும். இது சாமானிய மற்றும் விளிம்புநிலை மக்களை பெரிதும் பாதிக்கும். போக்குவரத்து கட்டணம் உயரும். இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும். இப்படி இருக்கும் சூழலில் இதை தேசபக்தியோடு பிரதமர் மோடி தொடர்பு படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?” என அவர் கேட்டுள்ளார்.