பிரதமர் நரேந்திர மோடி

 
இந்தியா

மக்கள் மன்றத்தில் மகளிர் சக்தியை எண்ணி எதிர்க்கட்சிகள் அச்சம்: பிரதமர் மோடி பேச்சு

வேட்டையன்

வாரணாசி: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தேசத்தின் சாமானிய பெண்கள் இடம்பெறுவதை எண்ணி எதிர்க்கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் நம் தேசத்தின் மகள்கள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைவதை அனுமதிக்க மாட்டார்கள். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பாரதத்தின் மகள்கள் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் தங்கள் பிடி தளர்ந்து போகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஏனெனில் அவர்களது அதிகாரம் குறித்து கேள்வி எழும். அதனால்தான் இந்த வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி செய்பவர்கள் முன்வரிசையில் நின்று மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து வருகின்றனர். அவர்களின் தீய நோக்கத்தை தேசத்தின் மகள்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மகளிர் பங்கேற்பை கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற செயலில் இறங்கினோம். கடந்த 40 ஆண்டுகாலமாக அதை தடுத்து வருகிறார்கள். அதனால்தான் 2023-ல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதை திருத்தும் வகையிலான சட்ட மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதை காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் தேசத்தின் மகளிருக்கு துரோகம் செய்துள்ளன. வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி செய்யும் இந்த கட்சிகள் மகளிர் சக்தியை எண்ணி அச்சமடைந்துள்ளது.

இன்று உங்களின் ஆசியை பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். வாரணாசியின் மக்களவை உறுப்பினராக, நாட்டின் பிரதமராக உங்கள் ஆசி பெற வந்துள்ளேன். தேசத்தின் நலன் சார்ந்து முக்கிய இலக்கை எட்ட உங்கள் ஆசி வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டை அமல் செய்வதுதான் இந்த முக்கிய இலக்காகும். அண்மையில் சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செயல்பாட்டால் எங்கள் முயற்சி நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

SCROLL FOR NEXT