புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதை நினைவுகூர்ந்த தோவல் அதுகுறித்து விரிவாக பேசியதாவது: விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலில் அனைத்துக் கள நிலவரங்களையும் கேட்டறிந்த பிரதமர், அடுத்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி ‘இதைச் செய்தது யார்?’ என்பதுதான்.
அதனைத் தொடர்ந்து, ‘தீவிரவாதிகள் நிலத்தில் இருந்தாலும், ஆகாயத்தில் இருந்தாலும், பாதாளத்தில் ஒளிந்திருந்தாலும் அவர்களைத் துரத்திச் சென்று வேட்டையாடுங்கள்; அவர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது’ என்று பிரதமர் உறுதியுடன் உத்தரவிட்டார். நமது உளவு அமைப்புகள் ஆற்றிய மிகச் சிறப்பான பணியால், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை குறுகிய காலத்தில் கண்டறிந்து, மிகத் துல்லியமாக நடவடிக்கை எடுக்க முடிந்தது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது. நாட்டின் பொறுமையை இந்தியாவின் பலவீனமாகக் கருதிவிடக் கூடாது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், ‘போய் மோடியிடம் சொல்லுங்கள்... என்ன செய்ய முடியுமோ செய்யட்டும்’ என்று பாதிக்கப்பட்டவர்களிடம் சவால் செய்தனர்.
எனவே, தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதையோ அல்லது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதைப் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உணர வைக்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் முதன்மை இலக்காக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் ராணுவப் பலத்துக்குச் சான்றாக இந்த ‘சிந்தூர்’ நடவடிக்கை அமைந்தது. இவ்வாறு அஜித் தோவல் பேசினார்.