புதுடெல்லி: நாடு முழுவதும் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
நாட்டில் பெண்களின் உடல்நலத்தை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் பெண் களுக் கான நோய்களைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு திட் டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, 14 வயது சிறுமிகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma virus -) எச்பிவி தடுப்பூசி போடும் திட்டத்தைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு நேற்று வந்த பிரதமர் மோடி இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மனித பாப்பிலோமா வைரஸ் என்பது பொதுவான வைரஸ் தொற்றாகும். இது பெரும்பாலும் பாலியல் தொடர்பு மற்றும் நெருங்கிய தோல் தொடர்பின் காரணமாகப் பரவுகிறது. இது கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்க காரணமாக உள்ளது.
இந்த வைரஸை தடுக்கும் திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1.15 கோடி சிறுமிகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதே
சங்களில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (ஆரம்ப சுகாதார மையங்கள்), மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்.
இந்தத் தடுப்பூசியை பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதலுடன் 14 வயது சிறுமிகள் போட்டுக் கொள்ளலாம். இது கட்டாயமில்லை. இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் அனைத்தும் சுகாதாரத் துறை நிபுணர்கள் மூலம் கண்காணிக்கப்படும். அத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அரிதாக ஏதேனும்
சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்க 24/7 வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘இந்த நாட்டு மகள்களின் உடல் நலம், வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு. இதற்காக அஜ்மீரில் இன்று எச்பிவி தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத் துள்ளேன். கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஒருமுறை வழங்கப்படும் இந்த எச்பிவி தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ராஜஸ்தானில் ரூ.16,680 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.