சீன அதிபர் ஜி ஜின்பிங். பிரதமர் மோடி
புதுடெல்லி: டெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் சற்றே அசவுகரியத்துடன் அமர்ந்திருந்ததைக் கவனித்த பிரதமர் மோடி, தனது உரையை நிறுத்தினார்.
பின்னர் அவர் பக்கம் திரும்பி, அவரது மொழிபெயர்ப்பாளரிடம் ‘எல்லாம் சரியா?’ (’Is it okay?’) என்று கேட்டார். சில நொடிகள் கழித்து மீண்டும் அந்த வினாவை எழுப்பினார். சில வினாடிகளுக்குப் பிறகு, ஜி ஜின்பிங் தலையசைத்து பதிலளித்தார். இதையடுத்து, மோடி தனது உரையைத் தொடர்ந்தார்.
மைக்ரோஃபோன் கோளாறு அல்லது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிபர் ஜி ஜின்பிங் அப்படி உணர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து சீனத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் உடனடியாக அளிக்கப்படவில்லை.
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இடையே பிரிக்ஸ் மாநாட்டின், பிரதமர் மோடியுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றார்.
அதேவேளையில், பிரிக்ஸ் தலைவர்கள், கூட்டணி நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு அளித்த சிறப்பு விருந்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்குத் திரும்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட பயண நேரம் மற்றும் நேர மண்டல மாற்றம் காரணமாக சீன அதிபர் மிகுந்த சோர்வாக காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாடு முடிந்து தாயகம் திரும்பிய அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவும் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிற பிரிக்ஸ் தலைவர்கள் இவ்விருந்தில் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.