கோப்புப் படம்
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானசேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் 350-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். இஸ்ரேலில் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஈரானில் 4,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.