பிரதமர் மோடி
புதுடெல்லி: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டெல்லியில் உள்ள கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், இயேசுவின் போதனைகள் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழா இன்று (டிச.25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
இதனையொட்டி, டெல்லியில் உள்ள கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், பாதிரியார்களிடம் கலந்துரையாடினார்.
மேலும், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் அமைதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.” என தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்: “கிறிஸ்துவின் போதனைகள் நமது உறவுகளைப் பலப்படுத்தி, நீடித்த அமைதியை மேம்படுத்தட்டும்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.