இந்தியா

‘எளிமைக்காக போற்றப்படுபவர் நல்லகண்ணு’ - பிரதமர் மோடி புகழஞ்சலி

வெற்றி மயிலோன்

புது டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டதற்காகவும், குரல் கொடுத்ததற்காகவும் நல்லகண்ணு எப்போதும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு. குறிப்பாக எளிமையான வாழ்க்கைக்காக அனைவராலும் போற்றப்பட்டவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

          

நல்லகண்ணுவின் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பொதுவாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்துக்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் முன்னோடியுமான மதிப்புக்குரிய நல்லக்கண்ணுவின் மறைவுச் செய்தி செய்தியறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.

தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த போராளி நல்லக்கண்ணு, எளிமை, நேர்மை , தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை.

அவரது மறைவு பொதுவாழ்வுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT