அமலாக்கத் துறை விசாரணைக்கு 2வது நாள் நேரில் ஆஜரான பினராயி விஜயன் மகள் வீணா

 
இந்தியா

அமலாக்கத் துறை விசாரணையில் பினராயி விஜயன் மகள் 2-வது முறையாக ஆஜர்

செய்திப்பிரிவு

கொச்சி: கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்ஆர்எல்) நிறுவனம், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு, எந்தவொரு சேவையையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்தா என்பவரால் நடத்தப்படும் எம்பவர் இந்தியா கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமும், எக்ஸாலஜிக் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் கடன் அளித்திருந்தது.

இதுதொடர்பாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எப்ஐஓ), ஏப்ரல் 2025ல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வீணாவிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வீணா நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT