பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலில் வாக்களித்து ஜனநாயக செயல்முறையில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, MY பாரத் தன்னார்வலர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
“ஜனநாயகத்தில் வாக்களிப்பது மிக முக்கிய உரிமையும், பொறுப்பும் ஆகும். வாக்களிப்பது அரசியலமைப்பு உரிமை மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தில் கட்டமைக்கும் பணியில் பங்கேற்பதற்கான ஒரு அடையாளம்.
நமது வளர்ச்சிப் பயணத்தின் வழிகாட்டிகள் வாக்காளர்கள்தான். விரலில் இடப்படும் அந்த அழியாத மை, நமது ஜனநாயகம் துடிப்பானதாகவும் நோக்கமுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்யும் ஒரு கவுரவச் சின்னமாகும். இந்த பணியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களை மனமார வரவேற்கிறேன். அவர்களை ஜனநாயக கடமையாற்ற அழைக்கிறேன்.
தேர்தலில் வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவத்தை MY பாரத் தன்னார்வலர்கள் வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தின் உணர்வை நாம் மதிப்போம். இதில் பங்கேற்பதன் மூலம் வளர்ந்த பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவோம்” என்றார்.