புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பரிந்துரைப்படி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த கூட்டம் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என தென் மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால், அனைத்து மாநிலங்களிலும் சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்த 25 நாள் கூட்டத் தொடரில் 19 அமர்வுகள் நடைபெறும்.
20 திரிணமூல் எம்.பி.க்களும், 6 சிவசேனா உத்தவ் அணி எம்.பி.க்களும் தங்களை தனி அணியாக அறிவிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த விவகாரம் மழைக்கால கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.