புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
கடந்த 2001-ம் டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப், டெல்லி போலீஸார் உள்ளிட்ட 9 பேர் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகள் 5 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் 24-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளின் படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
இங்கு சிஐஎஸ்எப் வீரர்கள் வீரவணக்க மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் கிரிண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று, தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையில், நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாடாளுமன்ற தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களை நமது தேசம் நினைவுகூர்கிறது. அவர்களின் இந்த உன்னத தியாகத்துக்காக இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த மாவீரர்களின் தியாகத்துக்கும் வீரமரணத்துக்கும் இந்த தேசம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்’’ என்று கூறியுள்ளார்.