டெல்லி பேரவை

 
இந்தியா

திமுகவில் பிராமணர் சேர எதிர்ப்பு: டெல்லி பேரவைக்கு குண்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெல்லி சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் சபாநாயகர் விஜேந்திர குப்தாவுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். முழுவதும் இந்தியில் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறியிருப்பதாவது:

          

பிராமணராக இருக்கும் எஸ்.வி.சேகர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரை பாஜக.,வின் பிராமின் ஏஜென்டாக நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். அதனால்தான் டெல்லி சட்டப்பேரவையை நாங்கள் 15 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் மூலம் தகர்க்கப் போகிறோம். 3 மணி நேரத்துக்குள் இந்த தாக்குதல் நடத்தப்படும். அங்கிருந்து முஸ்லிம் ஊழியர்களை மட்டுமே வெளியேற்ற வேண்டும்.

திமுக.,வில் பிராமணர்கள் யாரும் இருக்கக் கூடாது. அவர்கள் திமுகவில் சேர்ந்தால் பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என நிர்வாண நிலையில் கோஷமிட வேண்டும். அப்போதுதான் அவர்களை எங்களில் ஒருவராக நாங்கள் அனுமதிப்போம். இவ்வாறு அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை வளாகத்துக்குள் விஐபி நுழைவு வாயிலை உடைத்துக் கொண்டு முகமூடி அணிந்த நபர் ஒருவர் காரில் கடந்த வாரம் நுழைந்து, சபாநாயகரின் காரில் பூங்கொத்தை வைத்து விட்டு சென்றார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இ-மெயில் மூலம் டெல்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திமுகவில் பிராமணர்கள் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால், மிரட்டல் விடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT