புதுடெல்லி: பிஹார் மற்றும் மேற்குவங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் (எஸ்ஐஆர்) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆளும் பாஜக கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 193 பேர் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து திரிணமூல் எம்.பி. டெரக் ஓ பிரேன் கூறுகையில், ‘‘தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுகளுடன் எதிர்க்கட்சிகள் புதிய பதவி நீக்க தீர்மானம் நோட்டீஸ் வழங்கும்’’ என்றார்.
அரசியல் சாசனத்தின் 324 (5)-வது விதிமுறையின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பின்பற்றப்படும் நடைமுறை, தலைமை தேர்தல் ஆணையரை நீக்கவும் பின்பற்றப்படும். இந்த நோட்டீஸ் அனுமதிக்கப்பட்டால், மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தலைமை தேர்தல் ஆணையர் தனது தரப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும்.