புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) சேர்ந்த பேராசிரியர்களே பணத்துக்காக நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என்று சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த 72 மூத்த அதிகாரிகள், 8 தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார், தனியார் நீட் பயிற்சி மைய இயக்குநர் சிவராஜ் ரகுநாத், அழகுகலை நிபுணர் மணிஷா வாக்மரே, இடைத்தரகர்கள் தனஞ்செய் லோகண்டே, சுபம் கைர்னார், யாஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஷ் பிவால், மருத்துவர் மனோஜ் ஷிரூரே, தனியார் நீட் பயிற்சி மைய ஆசிரியர் ஹர்ஷத் குமார் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 28-ம் தேதி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் 94 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சிபிஐ குற்றப் பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
தேசிய தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேரா சிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகியோர் பணத்துக்காக நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர்.
நீட் வினாத்தாள் தயாரிப்பின்போது இவர்கள் 3 பேரும் வினாக்களை மனப்பாடம் செய்துள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பி வினாக்களை கைப்பட எழுதி உள்ளனர். மூன்று பேரும் கைப்பிரதியாக தயாரித்த வினாக்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த இடைத்தரகர் தனஞ்செய் லோகண்டேவுக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து ஹரியானாவை சேர்ந்த சுபம் கைர்னார், நீட் வினாத்தாளை வாங்கி உள்ளார். பின்னர் யாஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஷ் ஆகியோருக்கு நீட் வினாத்தாள் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த இடைத்தரகர்கள் மூலம் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக ஏராளமானோருக்கு நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இறுதிக் கட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவியருக்கு ஒரு வினாத்தாள் ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இடைத்தரகர்களிடம் இருந்து வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் இதுவரை 92 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
360 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. 20,000 பக்க ஆவணங்கள் குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டு உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.