புதுடெல்லி: நீட் மறுதேர்வு நேரத்தை 15 நிமிடம் நீட்டித்தும், மேலும் பல சலுகைகளை அறிவித்தும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் நோக்கில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தேர்வு கால அளவு 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு 5.15 மணிக்கு நிறைவடையும். தேர்வு தொடங்கும் போதும், முடியும்போதும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் அடங்கும். நடைமுறைச் செயல்பாடுகளால் நேரம் வீணாகாமல் தேர்வை எழுதுவதற்கு ஒதுக்கப்பட்ட முழு நேரத்தையும் அதற்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வின்போது, கணக்கீடுகளை போட்டுப் பார்ப்பதற்கும், குறிப்புகளை எழுதுவதற்குமான ரஃப் ஒர்க் பேப்பர் இரண்டில் இருந்து நான்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இடது கை பழக்கம் கொண்ட தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப ரஃப் ஒர்க் பக்கங்களின் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பக்கங்கள் வினாத்தாள் புத்தகத்தின் இறுதியில் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இனி அவை வினாக்கள் தொடங்குவதற்கு முன்பு 2 பக்கங்கள், இறுதியில் 2 பக்கங்கள் என இருக்கும். இது வினாத்தாளின் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகிய இரு பதிப்புகளிலும் இருக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு இத்தகைய மாற்றங்கள் குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்கும். நீட் 2026 தேர்வு, நியாயமாகவும், பாதுகாப்பானதாகவும், மாணவர்களை மையப்படுத்தியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதில் தேசிய தேர்வு முகமை உறுதிபூண்டுள்ளது. நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அனுபவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொட்ந்து ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.