மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஜைனுதீன் கோர்மத். இவர் திருச்சூர் மாவட்டம் அம்பலூரில் இருந்து மலப்புரத்தில் உள்ள கொல்லப்புரம் பகுதிக்கு அண்மையில் கேரள மாநில போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தில் ஏறி உள்ளார்.
அதில் இருக்கை இல்லை. இதையடுத்து, தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இருக்கை வழங்க வேண்டும் என்று நடத்துநரிடம் ஜைனுதீன் கூறியுள்ளார். அப்போது திருச்சூரில் நிச்சயம் இருக்கை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி இருக்கை தரவில்லை. மேலும், அவரை கொல்லப்புரத்தில் இறக்கிவிடாமல், நீண்ட தூரம் சென்று காக்கட் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஜைனுதீன் ஆளானார்.
இதைத் தொடர்ந்து முகமது ஜைனுதீன், மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கே.மோகன்தாஸ், உறுப்பினர்கள் பிரீத்தி சிவராமன், சி.வி.முகமது இஸ்மாயில் ஆகியோர் கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் ரூ.30 ஆயிரம் அபராதத்தை 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். தவறினால் 9% வட்டி தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.