நிதிஷ் குமாருடன் மகன் நிஷாந்த் குமார்
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்கிய ஜனதா தள கட்சியில் (ஜேடியு) உறுப்பினராக நேற்று சேர்ந்தார். அவரை துணை முதல்வராக்க கட்சி எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஹாரில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறையாக பிஹார் முதல்வரானார். இந்நிலையில் நிதிஷ் குமாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தனது மகன் நிஷாந்த் குமாரை ஐக்கிய ஜனதா தள கட்சியில் அடுத்த வாரிசாக கொண்டுவர முடிவு செய்தார்.
இது குறித்து பாஜக.,வுடன் ஆலோசனை நடத்தினார். நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடவும், அவரது மகன் நிஷாந்த் குமாரை ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைத்து துணை முதல்வராக்கவும், முதல்வர் பதவியை பாஜக.வுக்கு விட்டுத்தரவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகி இருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஐக்கிய ஜனதா தள கட்சியில் நேற்று உறுப்பினராக இணைந்தார். அப்போது கட்சியின் செயல் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ஜா, பிஹார் துணை முதல்வர் விஜய் சவுத்ரி மற்றும் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். முதல்வர் நிதிஷ் குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நிஷாந்த் குமார் கட்சியில் இணைந்ததும், இளைஞர் அணியினர் கோஷமிட்டனர். கட்சியில் இணைந்த பின், தலைமையகத்துக்கு வெளியே உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு நிஷாந்த் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் பேட்டியளித்த நிஷாந்த் குமார், ”கட்சியில் தீவிர உறுப்பினராக பணியாற்றி, கட்சி நலனை பாதுகாப்பேன். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட எனது தந்தை எடுத்த முடிவை மதிக்கிறேன்” என்றார்.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஹரி நாராயண் சிங் கூறுகையில், ”கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், நிஷாந்த் குமாரைத் துணை முதல்வராக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க கட்சியின் எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்” என்றார்.