நிதின் நபினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் அமித் ஷா

 
இந்தியா

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து

மோகன் கணபதி

புதுடெல்லி: பாஜக தேசிய செயல் தலைவராக பிஹார் அமைச்சர் நிதின் நபின் பொறுப்பேற்றார். அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பிஹார் மாநில அமைச்சரான நிதின் நபின், பாஜக தேசிய செயல் தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மலர்களைத் தூவியும், பூங்கொத்துகளைக் கொடுத்தும், சால்வைகளை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாய ஆகியோரின் சிலைகளுக்கு நிதின் நபின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் பூங்கொத்துக்களைக் கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்துக்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 45 வயதாகும் நிதின் நபின், பாஜகவின் மிகவும் இளம் வயது தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின், ‘‘பிஹார் மக்களுக்கும் எனது தொகுதி மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆசீர்வாதத்தால்தான் நான் தேசிய செயல் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பிரதமரின் ஆசிர்வாதம் இருக்கிறது. அவர் வழங்கிய வழிகாட்டுதலையும் தலைமைத்துவத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்’’ என தெரிவித்தார்.

பிஹாரில் பாஜக மூத்த தலைவர் மறைந்த நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகனான நிதின் நபின், தந்தையின் மறைவுக்குப் பிறகு, தீவிர அரசியலில் இறங்கினார். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாங்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி இருக்கிறார்.

பிஹாரில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதல்முறையாக நபின் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2010, 2015, 2020 மற்றும் 2025 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நபின் வெற்றி பெற்றுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, நிதின் நபின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளில் பாஜக ஈடுபடும் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT