புது டெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழுவை அவர் அறிவித்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் ஆகியோருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பாஜக வெளியிட்ட முக்கிய பொறுப்புகளின்படி, ஸ்மிரிதி இரானி தேசியப் பொதுச் செயலாளராகவும், ராம் மாதவ் தேசியத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசியப் பொருளாளராகவும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் தேசியப் பொதுச் செயலாளராகவும், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் தேசியத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் தேசியத் துணைத் தலைவர் பதவிகளில் தொடர்கின்றனர்.
வினோத் தாவ்டே மற்றும் சுனில் பன்சால் ஆகியோர் தேசியப் பொதுச் செயலாளர்களாகவும், பி.எல்.சந்தோஷ் தேசிய அமைப்பு பொதுச் செயலாளராகவும், அனில் ஆண்டனி தேசியச் செயலாளராகவும் தொடர்கின்றனர்.
பாஜகவின் தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தீபக் மஸ்கே நியமிக்கப்பட்டுள்ளார். ப்ரீத்தி காந்தி, சிவானந்த் திவேதி, அலோக் பட் மற்றும் அருண் யாதவ் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய துணைத் தலைவர்களாக ஒடிசாவை சேர்ந்த பைஜயந்த் ஜெய் பாண்டா. ஆந்திராவின் டி புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தின் ரேகா வர்மா, மகாராஷ்டிராவின் பாரதி பிரவின் பவார், கர்நாடகாவின் எம்.நாகராஜா, உ.பி.யின் தாரிக் மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொதுச் செயலாளர்களாக டெல்லியின் சுனில் பன்சால், ராஜஸ்தானின் சதீஷ் பூனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய செயலாளர்களாக கேரளாவின் கே.சுரேந்திரன், அனில் ஆண்டனி, தமிழகத்தை சேர்ந்த எம்.வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.