நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் நேற்று பேசியதாவது: "நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. பண வீக்கம் குறைந்து வருகிறது. அபரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
தனி நபர் வருமான வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரி வசூல் அதிகரித்து வருகிறது. நடுத்தர வர்க்க மக்கள் மீது வரி சுமைகள் சுமத்தப்படவில்லை. நாட்டின் கடன் சுமை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. அளவுக்கு அதிகமாக மத்திய அரசு கடன் வாங்கவில்லை. கடன் அளவு கட்டுக்குள் உள்ளது.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் அதிகமாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. வரும் 2047ம் ஆண்டுக்குள் உலக சந்தையில் 10 சதவீதத்தை கைப்பற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.