உயிரிழந்த நீலேஷ்குமார், அனாமிகா சமந்த்
லக்னோ: உத்தர பிரதேச தீ விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வாரமான நிலையில் ஜோடி ஒன்று கருகி உயிரிழந்த சோகம் தற்போது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசம் லக்னோ அருகே அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 3-வது தளத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. இது மளமளவென பரவி அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது. இதில் முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் சிக்கினர். இந்த மையத்தில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தீவிபத்தில் உயிரிழந்த 15 பேரில் திருமணம் நிச்சயமான ஜோடி ஒன்று இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த மையத்தில் பணியாற்றி வந்த நீலேஷ் குமார், அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த அனாமிகா சமந்த் ஆகியோரும் உயிரிழந்த 15 பேரில் அடக்கம். நீலேஷ்குமார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது காதலி அனாமிகா சமந்த். இவரும் இந்த பயிற்சி மையத்திலேயே வேலை செய்து வந்தார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து திருமணத்துக்கு சம்மதித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தான் அனாமிகாவின் வீட்டார், மேற்கு வங்கத்திலிருந்து உ.பி.க்கு வந்து மணமகன் வீட்டாரிடம் திருமணப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்து நிச்சயமும் செய்தனர். இந்நிலையில் தான் இந்த தீ விபத்து நடந்து இருவரது உயிரும் பறிபோய் விட்டது. திருமண ஏற்பாடுகள் தொடங்கிய வீட்டில் தற்போது ஈமச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து நீலேஷ்குமாரின் சகோதரர் அபிஷேக் கூறும்போது, “திருமண நிச்சயத்துக்காக கடந்த வாரம் சிறிய அளவில் நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் ஏற்பாடு செய்தோம். அனாமிகாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அவர் ஒரு கள்ளம், கபடமில்லாத பெண். எப்போதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பார். இருவரையும் இழந்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அடுத்த வாரம் மேற்கு வங்கத்துக்குச் சென்று அவர்கள் வீட்டினரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம். ரயில் டிக்கெட்டும் முன்பதிவு செய்துவிட்டோம். ஆனால் எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது. நிச்சயம் முடிந்து ஒரு வாரமான நிலையில் இந்த சம்பவம் நடந்துவிட்டது" என்றார்.