புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்து ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, சமூக வலைதளத்தில் காக்ரோச் ஜனதா கட்சியை கடந்த 16-ம்தேதி தொடங்கினார்.
இவர் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர். இதற்கு போட்டியாக ‘ஆகி ஜனதா கட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. இது தன்னை கிண்டல் செய்யும் எதிர்க்கட்சியாக முன்னிறுத்தியுள்ளது.
கரப்பான் பூச்சி கட்சியின் அரசியல் நடுநிலைமையை கேள்விக் குள்ளாக்குவதே நோக்கம் என்று ‘ஆகி ஜனதா கட்சி’ கூறுகிறது. ‘ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ்' என்ற அனிமேஷன் தொடரில் இருந்து ‘ஆகி ஜனதா கட்சி’ தன் பெயரைப் பெற்றுள்ளது.
இந்த கார்ட்டூன் தொடரில், ஆகி என்ற பூனை, ஜோயி, மார்க்கி மற்றும் டீ டீ என்ற 3 குறும்புக்கார கரப்பான் பூச்சிகளுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.
இதனால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அபிஜித் தீப்கே-வின் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகளை அம்பலப்படுத்துவதே முதன்மை நோக்கம் என்றும் அது கூறுகிறது.
அதன் இணையதளத்தில், ஆகி அமைப்பு அனைத்து வகையான கரப்பான் பூச்சிகளை யும் அழிக்கும் என்றும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்றும், நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவையும் பெறாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆகியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை, அது இளைஞர்களால் வழிநடத்தப்படும் சுதந்திரமான இயக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.