நுவாகோட் மாவட்டத்தின் திரிசூலி பஜார் பகுதி
காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன இந்தியர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 275 இந்தியர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செப். 4ம் தேதி இரவு 8.30 மணி வரை 169 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தின் திரிசூலி பஜாரில் இருந்து அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார், சமர்த் அபிஜித் பவார் (5 வயது சிறுவன்) ஆகிய மூவரும் நேற்று மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மூவரையும் விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன இந்தியர்களில் 169 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 275 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவின் திபெத்தில் சிக்கிக்கொண்டிருந்த 1,907 இந்தியர்கள் பத்திரமாக நேபாளம் வந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு பேரிடர் ஏற்பட்ட ஆகஸ்ட் 26 முதல் 95 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி 275 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பாக நாங்கள் நேபாள அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்.
169 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் நேபாள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இந்திய பயணிகள் யாரும் திபெத்தில் சிக்கிக் கொண்டிருக்கவில்லை என்று சீனாவில் உள்ள நமது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் தடயவியல் கருவிகள், பெய்லி பாலங்கள் உள்ளிட்டவற்றை நேபாள அரசு கோரி இருக்கிறது. இவற்றை அனுப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட 54 மீட்புப் படையினரை நாம் அனுப்பி உள்ளோம். இதில், 30 பேர் சுரங்க நிபுணர்கள், 19 பேர் தடயவியல் நிபுணர்கள். 5 பேர் மருத்துவக் குழுவினர். இந்தியாவில் இருந்து சென்றுள்ள இவர்கள், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரிப்பு: நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை 843 உடல்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. இதில், 758 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 85 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து 501 பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை 1030 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன.
4,898 பேர் காணாமல் போயிருக்கலாம் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.