புதுடெல்லி: நவோதயா வித்யாலயா பள்ளி தொடர்பான வழக்கில் தமிழகத்தின் மனப்போக்கு மாற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளி நிறுவுவது தொடர்பான வழக்கில் சுமார் ஒரு மணி நேர விவாதத்துக்கு பின்னர் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த கருத்தை தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த டிச.15-ல் மாவட்டம்தோறும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைப்பதற்கான தகுதியான இடங்களை அடையாளம் காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க தற்போது நீதிமன்றம் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளதாக தகவல்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், நவோதயா வித்யாலயா பள்ளி அமைப்பது கொள்கை அளவிலான முடிவு. அதை ஒரு மாநிலத்தின் மீது செயல்படுத்துமாறு அழுத்தம் தரக்கூடாது. அது மாநிலத்துக்கு எதிரான கொள்கை மற்றும் சட்ட விதிகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்றும் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் அப்போதைய தமிழக அரசு (திமுக ஆட்சி) சார்பில் தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளி மும்மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளது. இதன் மூலம் புறவாசல் வழியாக இந்தி மொழியை திணிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதன் பின்னர் நீதிபதி நாகரத்னா தனது கருத்தை தெரிவித்தார். “ஆட்சி மாற்றம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கல்வி நிலையானது. அது எந்தவொரு அரசின் விருப்பத்தையும் சார்ந்தது அல்ல. இன்று இந்த நிலை நவோதயா வித்யாலயா பள்ளிக்கு வந்துள்ளது. இதை உதாரணமாக ஆட்சி முறையின் மற்ற கொள்கைகளுக்கும் எடுத்துக்காட்டாக சொன்னால், நாடு என்ன ஆகும்? ‘தேசிய தொழில் கொள்கை’, ‘தேசிய நிதி கொள்கை’ உள்ளிட்டவற்றை ஏற்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா?” என்று அவர் தெரிவித்தார்.
‘இந்தி’ மொழி கற்பிக்கப்படாது என்ற மனப்போக்கை தமிழகம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், தனியொரு மாநிலம், தனியொரு நாடு போல செயல்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தது.
கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதாகவும். மேற்கூறிய தொழில் மற்றும் நிதி கொள்கைகள் மத்திய பட்டியலில் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா அதற்கு பதில் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிச.14-ல் நடைபெற உள்ளது.
வழக்கின் பின்னணி:
முன்னதாக, தமிழகத்தில் மாவட்டம்தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் பள்ளிக்கான நிலங்களை அடையாளம் காண்பது குறித்து 3 வாரத்துக்குள் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதன் விவரம்: நவோதயா பள்ளிகள் விஷயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை கடந்த ஜன.5-ம் தேதியிட்ட கடிதம் மூலம் ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்விக் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. தவிர, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான முன்மொழிவை வெறும் நிர்வாக முன்மொழிவாக மட்டுமே கருத முடியாது.
மத்திய அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, மாநில அரசால் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட கேள்விகளையும் இந்த வழக்கு எழுப்புகிறது. மத்திய அரசின் நிர்வாகக் கொள்கை மூலமாகவோ, நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, மாநிலச் சட்டத்துக்கு முரணான வகையில் செயல்படுமாறு கட்டாயப்படுத்த முடியுமா என்ற கேள்வியையும் இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
கல்வி என்பது பொதுப் பட்டியலில் வருவதால், இதில் சட்டம் இயற்றவும், கொள்கை வகுக்கவும் மாநில சட்டப்பேரவைக்கும் முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2006-ம் ஆண்டு தமிழ் கற்றல் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு மாநில அரசின் சொந்தச் சட்டங்களுக்கு முரணான மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்த முடியாது. எனவே, நவோதயா பள்ளிகள் நிறுவுவதை கட்டாயமாக்கவோ, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசைக் கட்டாயப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
மேலும், நிலம் தொடர்பான விஷயங்கள் மாநில விருப்புரிமைக்கு உட்பட்டவை என்பதால், ஒரு மாநிலத்திடம் அதன் நிலத்தை ஒப்படைக்கவோ, ஒதுக்கீடு செய்யவோ நீதிமன்றம் கட்டாயப்படுத்தி உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, நவோதயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணுமாறு கடந்த 2025 டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.