நாசிக்: நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களை மத மாற்றம் செய்ய முயன்ற விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை மலேசியாவுக்கு கடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் மதம் மாற வற்புறுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, காவல் துறை இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நீடா கான், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சக பெண் ஊழியரின் பெயரை `ஹனியா' என மாற்ற வற்புறுத்தியதோடு, அவரை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வேலைவாய்ப்பு என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணை மலேசியாவுக்கு அனுப்பி, அங்கு இம்ரான் என்பவரிடம் ஒப்படைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டது விசாரணையின்போது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கொலை மிரட்டல் மற்றும் மதமாற்ற முயற்சி வழக்கில் எஸ்சி, எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீடா கான் புர்கா மற்றும் இஸ்லாமிய மத நூல்களை வழங்கியுள்ளார். அவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் செல்போனில் சில மத ரீதியான செயலிகளை நிறுவியதுடன், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தொடர்ந்து மதப் பிரச்சார வீடியோக்களை அனுப்பி நீடா கான் மூளைச்சலவை செய்ய முயன்றதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீடா கானின் சகோதரர் டேனிஷ் ஷேக் மீது பாலியல் வன்கொடுமை புகார் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே திருமணமான டேனிஷ் ஷேக், அதை மறைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். உண்மை தெரிந்தவுடன், அந்தப் பெண்ணை மலேசியாவுக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீடா கான் தலைமறைவாகிவிட்டார். தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அவரது செல்போனைப் பறிமுதல் செய்து டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 8 பேர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் 8 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீடா கான் உள்ளிட்ட அனைவரையும் டிசிஎஸ் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.