மும்பை: மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டி பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதம் மாற கட்டாயப்படுத்தியாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி முதல் 2026 மார்ச் வரை நடந்ததாக கூறப்படும் இந்த குற்றங்கள் தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழுத் தலைவர்கள் மற்றும் மனிதவளத் துறையின் உதவிப் பொது மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பெண் அதிகாரி நீடா கான் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கில் 2022 மற்றும் 2024-க்கு இடையில் திடீரென பதவி விலகிய முன்னாள் ஊழியர்களிடம் எஸ்ஐடி மீண்டும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், நிறுவனத்தின் மனிதவளத் துறைக்கு 78-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பியதாகவும், பலமுறை தொலைபேசி அழைப்புகள் செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால், எதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கைதானவர்களில் ஒருவரான மனிதவள அதிகாரி அஸ்வினி சைனானி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ‘‘இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான்’’ என்று கூறி, புகார் அளிப்பதைத் தடுத்ததாகவும், இந்த விஷயத்தை கைவிடுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஏப்ரல் 28 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஸ்வினி, இந்துப் பெண் ஊழியர்களைக் குறிவைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அவர்களின் விருப்பத்துக்கு எதிராக மதச் சடங்குகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த கும்பலால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் புகார் அளித்திட தனி வாட்ஸ் அப் எண்ணை போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.