அமராவதி: ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது மகனும் மாநில அமைச்சருமான நாரா.லேகேஷை கட்சியின் செயல் தலைவராக நியமித்துள்ளார்.
29 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக் குழு, 31 உறுப்பினர்களை கொண்ட தேசியக் குழு, 185 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் மாநிலக் குழுவையும் அவர் அறிவித்தார். கட்சியின் தேசிய தலைவராக சந்திரபாபு நாயுடுவும் மாநில தலைவராக பி.ஸ்ரீநிவாஸ் ராவும் தொடர்கின்றனர். தேசிய பொதுச் செயலாளர்களாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, நந்தியால் எம்.பி. பைரெட்டி ஷபரி, மூத்த தலைவர் ராஜேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
44 ஆண்டு கால வரலாற்றில்: கட்சியின் 44 ஆண்டு கால வரலாற்றில் செயல் தலைவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். முதல்வரின் மைத்துனரும் மூத்த தெலுங்கு நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா, அரசியல் விவகாரக் குழு உறுப்பினராக தொடர்கிறார்.
மாநிலக் குழுவில் உள்ள 185 பேரில் 50 பேர் பெண்களாவர். மேலும் பிசி- 77, எஸ்சி- 25, எஸ்டி- 7, சிறுபான்மையினர் 13 பேர் இடம் பெற்றுளனர். இந்த நியமனம் மூலம் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கட்சிக்கு புதிய உயிரோட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.