நாக்பூர்: தினக்கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்களின் 12 வயது மகனை, செல்போன் திருடன் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த இரண்டு மாதங்களாக தினமும் பல மணி நேரம் சங்கிலியால் கட்டிப் பூட்டி வைத்துச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறை மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்தச் சிறுவனை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “மீட்புக் குழுவினர் சென்றபோது அச்சிறுவன் ஒரு வாளியின் மீது நின்றுகொண்டிருந்தான். அவனது பெற்றோர் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்குச் செல்லும் முன் அவனை கட்டி வைத்துவிடுவார்கள். இவ்வாறு கட்டியதால் 2 முதல் 3 மாதங்கள் பழமையான காயங்கள் சிறுவனுக்கு உள்ளன.
அந்தச் சிறுவனுக்கு நடத்தை சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. அவனது தவறான செயல்களால், குறிப்பாக திருட்டுப் பழக்கத்தால் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்” என்று தெரிவித்தன.