ஹைதராபாத்: இந்தியாவில் மக்கள் தொகை ரீதியாக இந்துக்களை முஸ்லிம்கள் முந்திவிடுவார்கள் என்ற கருத்தினை நிராகரித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, அத்தகைய அச்சங்கள் தவறானவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறினார்.
தெலங்கானா நகராட்சித் தேர்தல்களுக்காக நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஹைதராபாத் எம்.பியான ஓவைசி, “பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ராஜ்யசபாவில் ஆற்றிய உரையில், உலகம் முழுவதும் வயதானோர் அதிகம் உள்ள நிலையில், இந்தியாவில் இளம் மக்கள் தொகை அதிகம் இருப்பதாக கூறினார். இந்த இளம் மக்கள் தொகைக்காக அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றால், அவர்களது வேலைவாய்ப்புகளுக்காக பிரதமர் என்ன செய்தார்? அவர்களுக்கு என்ன திறன்கள் கற்பிக்கப்பட்டுள்ளன?
மக்கள் தொகை குறித்த விவாதங்கள் நீண்டகால பொருளாதார அழுத்தங்களைக் கவனத்தில் கொள்ளாமல், பெரும்பாலும் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகின்றன
20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இளம் மக்கள் தொகைக்கு வயதாகிவிடும். எவ்வளவு பணவீக்கம் இருக்கும், அவர்கள் எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அதற்குப் பதிலாக, முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகை நிலையாகவே இருக்கும். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் இந்துக்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை முந்தாது.
25-30 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் மக்கள் தொகைக்கு வயதாகும்போது, என்னவாகும் என்பதை இப்போதுதான் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவேதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றெடுக்குமாறு கூறுகிறார். அவர் தானே அதைச் செய்யவில்லை என்பது வேறு விஷயம்" என்று ஒவைசி கூறினார்.