புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் உள்ள ராமர் கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கருவறையில் நுழைய மட்டும் அனுமதிப்பதில்லை.
இச்சூழலில், ராமர் கோயிலில் கடந்த வாரம் வந்த ஒரு முஸ்லிம் இளைஞர், சால்வை விரித்து தொழுகை நடத்த முயற்சித்தார். உடனடியாக இதைப் பார்த்த பாதுகாப்பு போலீஸார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர்.
போலீஸாரின் விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அயோத்தியைச் சேர்ந்த துறவிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் அயோத்தியில் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இது குறித்து அயோத்தியின் துறவிகள் சங்கம் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ராம ஜென்மபூமி கோயில் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது. அங்கு மத உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தச் செயலையும் சகித்துக்கொள்ள முடியாது.
சூழலைக் கெடுப்பதற்கும் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பதற்கும் திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, கோயில் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்கு அயோத்தியில் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயோத்தியின் ஹனுமன் கோயிலின் மடாதிபதியான ராஜு தாஸ் கூறுகையில், ‘ராம ஜென்மபூமி கோயிலில் ஒரு முஸ்லிம் தொழுகை நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் மதவெறியர்களாக இருந்திருந்தால், ராம
ஜென்மபூமி கோயிலில் தொழுகை நடத்தியவர் உயிர்பிழைத்திருக்க மாட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்திக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றார்.