இந்தியா

“1.5 கோடி மரங்களை அழிக்க வழிவகுக்கிறார் மோடி” - ‘கிரேட் நிகோபார்’ திட்டத்தை எதிர்க்கும் ராகுல்

அனலி

கிரேட் நிகோபார் திட்டத்தால் மோடி அங்குள்ள 1.5 கோடி மரங்களை வெட்டி வீழ்த்த வழிவகை செய்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் மத்திய அரசு கிரேட் நிகோபார் திட்டத்தை ஏன் அனுமதிக்கக் கூட என்பதை விளக்கியுள்ளார். இதற்காக அவர் அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு நேரில் சென்றுள்ளார்.

கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்ன?

ராகுல் காந்தியின் கண்டனத்தை அறியும் முன்னர், கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்னவென்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவின் தென்கடைக் கோடியில் இருக்கிறது கிரேட் நிகோபார் தீவுகள். இந்தத் தீவுகள் இந்திய நிலப்பரப்பைவிட தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கிறது.

1984-ல் இந்திரா காந்திக்குப் பின்னர் இந்த தீவுகளுக்கு எந்தவொரு இந்தியப் பிரதமரும் சென்றதில்லை. இந்த தீவுக்கூட்டத்தில் 10 ஆயிரம் பழங்குடியின மக்கள் தான் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இன்று முறையான முழுமையான சென்சஸ் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தீவுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப் பெரிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

மத்திய அரசு முன்மொழிந்துள்ள கிரேட் நிகோபர் திட்டத்தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்​கிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்ளன.

ஆசி​யா, ஐரோப்பா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இடையே பயணிக்​கும் சரக்கு கப்​பல்​களை சிங்​கப்​பூர், கொழும்பு துறை​முகங்​கள் கையாள்​கின்​றன. இதற்கு மாற்​றாக இந்​தி​யா​வின் நிகோ​பார் தீவின் கலாத்​தியா வளை​கு​டா​வில் மிகப் ​பெரிய துறைமுகம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் சர்​வ​தேச கடல் வணிக போக்குவரத்தில் இந்​தியா மிக முக்​கிய இடத்​தைப் பிடிக்கும்.

மேலும், ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோ​பார் தீவில் பிரம்​மாண்ட கிரீன்​பீல்ட் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்பட உள்​ளது. இதுவும் ராணுவ பயன்​பாட்​டுக்​கும் ஏற்​ற​தாக வடிவமைக்கப்​படும்.

இதன்​மூலம் சுற்றுலா, சரக்கு போக்​கு​வரத்து மேம்​படும். விமானப் படை​யின் வலு​வான தளமாக​வும் செயல்​படும்.நிகோபர் தீவில் குடி​யிருப்பு பகு​தி​கள், வணிக வளாகங்​கள், சுற்​றுலா வசதி​கள், பாது​காப்பு உள்கட்டமைப்​பு​கள் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பிரம்மாண்ட ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்பட உள்ளது. இந்த நகரத்​தில் 5 லட்​சம் பேர் வரை வசிக்க முடியும்.

துறை​முகம், விமான நிலை​யம், ஒருங்​கிணைந்த நகரம் ஆகியவற்றுக்கு மின்​சா​ரம் விநி​யோகம் செய்ய எரி​வாயு மற்​றும் சூரிய மின் சக்தி உற்​பத்தி நிலை​யம் அமைக்கப்படும்.

கிரேட் நிகோ​பார் துறை​முக திட்​டத்​தால் இந்​தி​யா​வின் கடல் வழி வர்த்தகம் அதி​கரிக்​கும். வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கும். சுற்றுலா துறை மேம்​படும். கணிச​மான முதலீடு​கள் குவி​யும்.

இந்​திய பெருங்​கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலு​வடைய கிரேட் நிகோ​பார் உள்​கட்​டமைப்பு திட்​டங்​கள் மிக​வும் அவசி​யம். இந்த திட்​டத்​தால் அந்தமான்- நிகோ​பார் தீவு​களில் 1.82 சதவீத காடு​கள் மட்டுமே அழிக்​கப்​படும். இதனால் சுற்​றுச்​சூழலுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்​பு​கள் ஏற்​ப​டாது என்று மத்திய அரசு கூறுகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி இது குறித்து இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “கிரேட் நிகோபார் திட்டத்தால் 161 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மழைக்காடுகளுக்கு ஆபத்து இருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 1.5 கோடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும், பாதுகாக்கப்பட்ட பவளப் பாறைகள் அழியக்கூடும், மேலும் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் டெல்லியை போல் 4 மடங்கு பெரியதான இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்களை அழிக்கப் போகிறார்கள். இங்கே துறைமுகத்தை உண்டாக்கி பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதித்து, அதை இங்கே சொகுசு விடுதிகளும், காசினோக்களும் கட்டி ரியல் எஸ்டேட் விளையாட்டை அரங்கேற்றப் போகிறார்கள்.

அவர்களின் இலக்கு அதானிக்கு உதவ வேண்டும் என்பதே. அதற்காகவே அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு என்று கூறி கடற்படையின் பின்னால் ஒழிந்து கொள்கின்றனர்.

ஏற்கெனவே கேரளாவில் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் இருக்கிறது. அப்படியானால் கிரேட் நிகோபாரிலும் ஒரு துறைமுகத்தைக் கட்ட வேண்டிய அவசியம் என்ன?

கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி கட்ந்த மே மாதம் அர்ப்பணித்து வைத்தார்.

உங்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் ஐஎன் எஸ் பாஸ்-ஐ விரிவாக்கம் செய்யுங்கள். கடந்த 5 ஆண்டுகளாகவே அதற்கான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அதுமட்டுமில்லாது, கிரேட் நிகோபார் பகுதியில் உள்ள மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த கட்டாயமாக தடையில்லா சான்றிதழ்கள் பெறப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT