புதுடெல்லி: நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13ம் தேதி பதவியேற்று, மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடிக்க உள்ளார். இந்த மைல்கல் மோடியின் அரசியல் வாழ்க்கையில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாகும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நீண்ட, தொடர்ச்சியான பதவிக் கால சாதனையை அவர் ஏற்கெனவே கடந்த 2025 ஜூலை 25ம் முறியடித்திருந்தார்.
இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு பிந்தைய தொடக்க ஆண்டுகளில் நாட்டை நேரு வழி நடத்தியபோது, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014-ல் மோடி பதவியேற்றபோது மக்கள் தொகை 131 கோடியை தாண்டியது. தற்போது அது 146 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
1951- 52ல் நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2014ல் 464 ஆக உயர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் 744ஐ எட்டியது. முதல் பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 17 கோடியாக இருந்த நிலையில் இது 2014-க்குள் 83 கோடிக்கும் அதிகமாக வளர்ந்திருந்தது.
இரு காலக் கட்டங்களின் அரசியல் சூழ்நிலைகளும் முற்றிலும் மாறு பட்டவையாக உள்ளன. 1952 தேர்தலில் மொத்தம் உள்ள 489 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் மட்டும் 364 இடங்களை வென்றிருந்தது. இதற்கு நேர்மாறாக, மோடி வலுவான மாநிலக் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கடுமையான போட்டி நிறைந்த அரசியல் சூழலுக்கு இடையே ஆட்சி செய்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக 2 முறை முழு பெரும்பான்மையுடன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் நேருவுக்குப் பிறகு பதவியில் இருக்கும் போதே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல் பிரதமரும் இவரே ஆவார்.
மோடியின் பதவிக் காலத்தில், இந்தியாவில் உயர்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கணிசமாக விரிவடைந்துள்ளன. 2014 மற்றும் 2026-க்கு இடைப் பட்ட காலத்தில் ஐஐடி-களின் எண்ணிக்கை 16-ல் இருந்து 23 ஆகவும், ஐஐஎம்-களின் எண்ணிக்கை 13ல் இருந்து 21 ஆகவும், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 23 ஆகவும் அதிகரித்துள்ளன.
ஆட்சி நடத்தும் சூழலும் மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள் அல்லது உடனடி டிஜிட்டல் தகவல் தொடர்புகள் இல்லாத ஒரு காலத்தில் நேரு ஆட்சி செய்தார். ஆனால் மோடியின் பதவிக் காலமோ, 24 மணி நேரமும் இயங்கும் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களின் கண்காணிப்பின் கீழ் நகர்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என மோடியின் மொத்த பதவிக் காலம் 8,930 நாட்களை தாண்டியபோது, இந்தியாவின் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
வரும் ஜூன் 10ம் தேதி 4,399 நாட்கள் பதவிக் காலத்தை அவர் கடக்கும்போது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்து, இந்தியாவின் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக மோடி அதிகாரப்பூர்வமாக உருவெடுப்பார்.