அமைச்சர் ஹர்தீப்
புதுடெல்லி: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர வணிக உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு இடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் எரிபொருள் விலையில் எந்த உயர்வும் ஏற்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் உலகின் பல நாடுகள் கடுமையான சிக்கல்களை சந்தித்தன. அந்நாடுகளில் எரிபொருள் விலை 50 % முதல் 60 % வரை உயர்ந்தன. ஆனால் நம் நாட்டில் அத்தகைய சூழல் இல்லை.
இந்தியாவிடம் தற்போது முக்கிய எரிசக்திப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவை விட அதிகமாகவே உள்ளது. இதில் 60 நாட்களுக்குப் போதுமான கச்சா எண்ணெய், 60 நாட்களுக்குப் போதுமான எல்என்ஜி, 45 நாட்களுக்குப் போதுமான எல்பிஜி கையிருப்பு உள்ளது. எனவே விநியோகம் சார்ந்த எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசு நிலைமையை தினமும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.