இந்தியா

மேகாலயா அமைச்சர், அதிகாரிகள் 6 மாதம் வெளிநாடு செல்ல தடை

செய்திப்பிரிவு

ஷில்லாங்: மேகாலயா மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடுத்த 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மேகாலயா மாநில அரசு நேற்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

மாநில அரசின் செலவுகளை குறைக்கும் பொருட்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அடுத்த 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லக்கூடாது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி வளங்கள் மீதான அழுத்தம் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில், பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ( நிரந்தர அல்லது ஒப்பந்தப் பணியாளர்கள் ) மேற்கொள்ளும் அனைத்து அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களையும் ஆறு மாதங்களுக்கு நிறுத்திவைக்குமாறு ஆளுநர் தரப்பில் உத்தரவு வந்துள்ளது. பொது நலன் கருதியும், சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையின் விளைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 68 அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவிருந்த 8 வெளிநாட்டுப் பயிற்சிப் பயணங்கள், அனுபவப் பரிமாற்றத் திட்டங்களுக்கான பயணங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT