புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உ.பி.யில் மதுராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் காணிக்கை திருட்டு நடந்துள்ளதாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் நிலம் மீட்பு தொடர்பான வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான துறவி தினேஷ் பலஹாரி மகாராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வருக்கு துறவி தினேஷ் எழுதிய கடிதத்தில், ‘‘கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக ரொக்கம், தங்கம், வெள்ளி ஆபரணங்களைப் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். அதில் முறைகேடுகள் நடக்கின்றன.
கோயில் நிர்வாகி கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் செயலாளர் கபில் சர்மா, ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்துள்ளார். எனவே காணிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், தன் மீதானப் புகாரை மறுத்துள்ள கபில் சர்மா, அரசு விசாரணைக்கு அறக்கட்டளை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரா கோயிலை நிர்வகிக்கும் கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், கோயில் நிதி முறைகேடு குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநில கட்சித் தலைவர் மணிஷ் சாஹ்னி தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, நான்கு சங்கராச்சாரியார்களின் தலைமையில் ‘இந்து பாதுகாப்பு வாரியம்’ அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தின் போது மணிஷ் பேசுகையில், ‘‘ராமர் கோயிலில் காணிக்கை, நிலப் பரிவர்த்தனையில் முறைகேடு, மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வழங்கப்பட்ட வெள்ளியின் தரம் குறித்த சர்ச்சை, திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத விவகாரம் ஆகியவை லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. எனவே, முற்றிலும் சுதந்திரமான அமைப்பு தேவைப்படுவதால் அனைத்து கோயில்களையும் அரசே நிர்வகிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.