மத்திய பிரதேசத்தின் ரத்லம் நகர் அருகே சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். படம்: பிடிஐ
போபால்: மத்திய பிரதேசத்தில் திருவனந்தபுரம் - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 68 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 15-ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களைக் கடந்து சென்ற ரயில், நேற்று அதிகாலை 3.45 மணிக்கு மத்திய பிரதேச மாநிலத்தின் ரத்லம் நகரில் இருந்து புறப்பட்டது.
லூனி ரிச்சா - விக்ரம்கர் அலோட் பகுதிகளுக்கு இடையே அதிகாலை 5.15 மணிக்கு ரயில் வந்தபோது பி-1 பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டி தீப்பிடித்து எரிவதை பார்த்த கார்டு உடனடியாக ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த ஆர்பிஎப் போலீஸார் விரைந்து செயல்பட்டு பி-1 பெட்டியில் இருந்த 68 பயணிகளை 15 நிமிடங்களுக்குள் கீழே இறக்கினர். விரைவாக செயல்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அடுத்த 10 நிமிடங்களுக்குள் பி-1 பெட்டி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில், அருகில் உள்ள சரக்குப் பெட்டிக்கும் தீ பரவியது. மத்திய பிரதேச தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, “ரயில் கார்டு, ஓட்டுநர்கள், ஆர்பிஎப் போலீஸார் விரைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. 68 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன.