இந்தியா

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் - ‘ஹிட்’ ஸ்ப்ரே உடன் வந்த நபரால் பரபரப்பு

வேட்டையன்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று (ஜூன் 6) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டிருந்த பகுதிக்கு ‘ஹிட்’ ஸ்பிரே உடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளது. அமெரிக்​கா​வில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் இந்த கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் கல்வித்துறையில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சி அறிவித்தது.

இந்த போராட்டத்துக்கு டெல்லி காவல் துறையும் அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தலாம் என காவல் துறை அனுமதி வழங்கி உள்ளதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கரப்பான் பூச்சி முகமூடி அணிந்து பங்கேற்ற இளைஞர்கள்

இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். இவர்களுடன் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் இணைந்துள்ளார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து அவர் டெல்லி வந்திருந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவர், தனது கையில் அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை வைத்திருந்தார். அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக பல இளைஞர்கள் குழுமியிருந்த கூட்டத்துக்குள் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ‘ஹிட்’ ஸ்பிரே உடன் வந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த நபர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளம் மூலம் கவனம் பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் கள போராட்டமாக இந்த போராட்டம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT