புதுடெல்லி: மகாத்மா காந்தியின் கடிதம், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர் ஆனந்த் டி. ஹிங்கோரானி. இவருக்கு காந்தியடிகள் உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்த 688 பிரதிகளை தனது கைப்பட கடிதமாக எழுதி அனுப்பி உள்ளார்.
குறிப்பாக, ஹிங்கோரானியின் மனைவி வித்யா மறைந்த பின்னர், 2 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தியால் தினசரி எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள், ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. இருவருக்கும் இடையிலான நெருக்கமான உறவைப் பதிவு செய்துள்ள முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சாஃப்ரன் ஆர்ட் நிறுவனம் சார்பில், ‘காந்தி: ஆனந்த் டி ஹிங்கோரானியின் தொகுப்பிலிருந்து’ என்ற பெயரில் நடைபெற்ற ஏலத்தில், இந்த கடிதங்கள் அடங்கிய 86 தொகுப்புகள் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. ஏலத்தில் விற்பனையான இந்திய வரலாற்று ஆவணம் ஒன்றுக்கு கிடைத்த அதிகபட்ச தொகை இதுவாகும்.
இதுகுறித்து, சாஃப்ரன் ஆர்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் வாசிராணி கூறுகையில், “ஆனந்த் டி. ஹிங்கோரானி சேகரிப்பை ஏலத்துக்குக் கொண்டு வந்து, காந்தியின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளின் குறிப்பிடத்தக்க பதிவைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது பெருமையாக உள்ளது. காந்தி பொதுவெளியில் வலியுறுத்திய கொள்கைகளை தனது வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடித்தார் என்பதை அறிந்துகொள்ள இந்தக் குறிப்புகள் அரிய வாய்ப்பை வழங்குகின்றன” என்றார்.
இதுதவிர, ‘கடவுள் பற்றிய செய்தி’ என்ற பெயரில் கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகளை உள்ளடக்கிய கடிதங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது. காந்தி தான் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களில், ‘பெட்டி சர்க்கா’ எனப்படும் பெட்டி வடிவ ராட்டையும், ராட்டைச் சுழற்றுவதன் ஆன்மிக ஒழுக்கம் குறித்து அவர் எழுதிய இரண்டு கடிதங்களும் இடம் பெற்றிருந்தன.
இந்தத் தொகுப்பு ரூ.1.02 கோடிக்கு விற்பனையானது. காந்தி எழுதிக் கொண்டிருக்கும் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் ரூ.78 லட்சத்துக்கும், பொருளாதார சுதந்திரம் தொடர்பான காந்தியின் கடிதங்கள், தந்திகள், அஞ்சல் அட்டைகள் ரூ.57.60 லட்சத்துக்கும் விற்பனையானது.