புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் சவுக் பகுதியின் சராய் ஆகா மீர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால். இவர் பள்ளி, கல்லூரி கட்டுவதற்காக பைசாபாத் சாலையைச் சேர்ந்த போலநாத் சுக்லா, வினய் குமார் சுக்லா ஆகியோரிடம் ரூ.5.67 கோடிக்கு நிலம் வாங்கியுள்ளளார்.
அதன்பின், அறக்கட்டளை பெயரில் நிலத்தை போலநாத் மற்றும் வினய் குமார் இருவரும் பத்திரப் பதிவு செய்து கொடுத்தனர்.
இந்நிலையில், கடந்த மே 1-ம் தேதி அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகளை அறக்கட்டளை தொடங்கியது. அப்போது வங்கி அதிகாரி ஒருவர் திடீரென அங்கு வந்து, அந்தச் சொத்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். அதை கேட்டு இக்பால் உட்பட அறக்கட்டளை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அந்த நிலம் 1985-ம் ஆண்டிலேயே போலநாத் மற்றும் வினய் குமார் ஆகியோரால் மோஹித் சேத்தி என்பவருக்கு விற்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பணத்தை இருவரிடமும் கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மேற்கு மண்டல துணை ஆணையர் கமலேஷ் தீக் ஷித்திடம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையல் போலநாத் சுக்லா, வினய் குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.