இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் இன்று (சனிக்கிழமை) காலை பதிவான கனமழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் களத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
வாகமன், அடூர்மலா, அடிமாலி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடிமாலியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் லாரி ஒன்று இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு படையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்கின்ற காரணத்தால் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாகமன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று பாதிக்கப்பட்டது. அதில் வசித்த பிரபாகரன் நாயர் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அடூர்மலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கி மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேரிடர் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடரும்: வானிலை மையம்
நிலச்சரிவு ஏற்பட்ட சூழலில் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட கேரளத்தின் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோழிக்கோடு, லட்சத்தீவு, மலப்புரம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சூர், வயநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.