திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மோனாலிசா போஸ்லே மற்றும் ஃபர்மான் கான்
திருவனந்தபுரம்: “இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நாங்கள் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டோம். இதில் லவ் ஜிகாத் இல்லை” என்று நடிகை மோனாலிசா போஸ்லே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராக்ஷம் மற்றும் மணிகளை விற்பனை செய்த மோனாலிசா போஸ்லேவின் வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில், அவர் தனது ஆண் நண்பரான ஃபர்மான் கான் என்பவரை நேற்று (புதன்கிழமை) மாலை கேரளாவின் அருமனூரில் உள்ள நயனார் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவில் கேரள அமைச்சர் சிவன்குட்டி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ரஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மோனாலிசாவும் ஃபர்மான் கானும் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஃபர்மான் கான், ‘‘திரைப்பட ஷூட்டிங்கின்போது நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டோம். நாங்கள் இணைந்து பணியாற்றினோம். மோனாலிசா போஸ்லேதான் தனது காதலை வெளிப்படுத்தினார். முதலில் நான் மறுத்துவிட்டேன். பிறகு அவர் என்னை சம்மதிக்க வைத்தார். நாங்கள் சுமார் ஆறு மாதங்கள் பழகினோம். இந்த ஆறு மாதங்கள் எங்களுக்கு அறுபது ஆண்டு கால காதல் வாழ்க்கையைப் போல இருந்தது. அதனால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.
நயனார் கோயில் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் இங்கு நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். கேரள மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்’’ என தெரிவித்தார்.
மோனாலிசா போஸ்லே பேசும்போது, ‘‘இந்த திருமணத்தை எனது பெற்றோர் விரும்பவில்லை. எனது அத்தை மகனை எனக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டார்கள். அதை நான் விரும்பவில்லை. நான் மறுத்துவிட்டேன். ஃபர்மான் கானை திருமணம் செய்து கொண்டிருப்பதால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நாங்கள் இருவரும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டோம். இதற்காக இருவருமே மதம் மாறவில்லை. எனது இந்த திருமணத்தில் லவ் ஜிகாத் இல்லை’’ என தெரிவித்தார்.
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இருவரும் கேரள காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.