டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மறைவை அடுத்து, அவரது மகன் தாரிக் ரஹ்மானை டாக்காவில் சந்தித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆறுதல் தெரிவித்தார்.
வங்கதேசத்தின் முதல் பிரதமரான கலீதா ஜியா (80) நேற்று காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மறைவு செய்தி கவலையளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று காலை 11.30 மணி அளவில் டாக்கா சென்று கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள தனிப்பட்ட கடிதத்தையும் அவர் வழங்கினார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘டாக்கா வந்ததும் வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் மகனும் பிஎன்பி-யின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானைச் சந்தித்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கடிதத்தை அவரிடம் வழங்கினேன்.
இந்திய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். பேகம் கலிதா ஜியாவின் தொலைநோக்குப் பார்வையும் விழுமியங்களும் நமது கூட்டாண்மையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜீயாவின் மறைவு காரணமாக வங்கதேசம் துக்கம் அனுசரிக்கும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டாக்காவுக்கு வருகை தந்து இந்திய மக்கள் சார்பாகவும் இந்திய அரசு சார்பாகவும் இரங்கலைத் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்தார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
டாக்கா சென்ற ஜெய்சங்கரை, வங்கதேச வெளியுறவுத் துறை செயலாளர் பர்ஹாத் ஹூசைன் வரவேற்றார்.