இந்தியா

சூரியசக்தி ரயில் திட்டத்துக்கு கேரள நிபுணர் குழு எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000 கோடிசெலவில் சூரியசக்தி அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக இடைக்கால அறிக்கையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) முதன்மை ஆலோசகராக இருந்த ஸ்ரீதரன் கேரள அரசிடம் அளித்திருந்தார்.

இது குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று கூறியதாவது: இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் அல்லது நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் தொடங்க வேண்டாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இத்திட்டத்தில் சரக்குப் போக்குவரத்து குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இது பயணிகள் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்த பிறகு பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பதில் தெளிவு இல்லை. சரக்கு போக்குவரத்து இல்லாமல், இந்த ரயில் பாதை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருக்காது.

இதுபோன்ற ஒரு மெகா திட்டத்திற்கு கேரளாவின் நிதி ஆதாரங்கள் குறைவாக இருப்பதையும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது டிஎம்ஆர்சி அறிக்கை முழுமையற்றதாக உள்ளது. முந்தைய அரசு கே-ரயில், சில்வர்லைன் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றபோது, சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்பி நாங்கள் அதை எதிர்த்தோம். அதே ஆபத்துகளை மீண்டும் எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் சதீசன் கூறினார்.

SCROLL FOR NEXT